Jul 9, 2026 - 04:16 PM -
0
நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில், டெங்கு அதி அபாய வலயங்களில் இன்று (09) முதல் விசேட டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், நுவரெலியாவில் "தூய்மையான நகரம் - ஆரோக்கியமான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ், நுளம்பு பெருக்கத்தை ஒழிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, நுவரெலியா ஹவஎலிய மஹிந்தமாவத்தை பகுதியில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, டெங்கு கொசுக்கள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டதுடன், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், டெங்கு பரவக்கூடிய வகையில் வீட்டைப் பராமரித்து வந்த உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு, நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் டபிள்யூ. எம். யூ. வணிகசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழும், மாநகரசபை சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழும் நடைபெற்றது.
இதில் நுவரெலியா சுற்றுச்சூழல் பொலிஸார், இராணுவ அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் கலந்துகொண்டு, அர்ப்பணிப்புடன் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
--
