Jul 15, 2026 - 10:49 AM -
0
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதை அடுத்து இந்திய ஒருநாள் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 2027 உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்க வேண்டும் என்றால் தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடரில் அவர் ஓட்டங்களை குவிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் 259 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் போது ரோஹித் சர்மா 21 பந்துகளில் 11 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எப்போதும் அதிரடியாக ஆடும் ரோஹித் சர்மா ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக நிதான ஆட்டம் ஆடினார். ஆனால், அதிலும் சொதப்பி வெறும் 11 ஓட்டங்களையே எடுத்தார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா துவக்கம் அளித்தனர். சுப்மன் கில் இயல்பாக ஓட்டங்களை குவித்த நிலையில் ரோஹித் ஆரம்பம் முதலே தடுமாறினார். அவர் ஆட்டமிழந்து வெளியேறிய பின் விராட் கோலி வந்தார்.
அவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விராட் கோலியும் ஏமாற்றம் அளித்தார். அவர் 6 பந்துகளை சந்தித்து 5 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின் அணி தலைவர் ஷுப்மன் கில் மற்றும் துணை அணி தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 100 மேல் கொண்டு சென்றது.
75 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 80 ஓட்டங்களை எடுத்த கில் தொடையில் காயம் காரணமாக துடுப்பெடுத்தாடும் போதே களத்தை விட்டு வெளியேறினார்.
இதன்பின், அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
45.2 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெற்றி பெற்றது.
இந்நிலையில், விராட் கோலியை விட ரோஹித் சர்மாவுக்கே ஒருநாள் அணியில் அழுத்தம் அதிகம் உள்ளது. அவரது தொடக்க வீரர் இடத்துக்கு ஜெய்ஸ்வால் தயாராக இருக்கிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பில் எல்லாம் அவர் ஓட்டங்களை குவித்து இருக்கிறார். எனவே, ரோஹித் சர்மா இங்கிலாந்து தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளில் சதம், அரைசதம் என பெரிய அளவில் ஓட்டங்களை குவிக்கவில்லை என்றால் அவரது இடத்தில் ஜெய்ஸ்வால் தான் இனி ஆடுவார் தெரிவிக்கப்படுகிறது.
