Jul 16, 2026 - 09:04 PM -
0
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (16) 34ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவு செய்யப்பட்டு, அடையாளமிடப்பட்ட பின்னர் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட எலும்புத் தொகுதிகளில் 3 சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனவும், ஒரு குழந்தையின் எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 130 பிற சான்றுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோர் இந்த அகழ்வுப் பணிகளில் பங்கேற்று வருகின்றனர்.
--
