Jul 16, 2026 - 10:29 PM -
0
சந்தையிலுள்ள சிலவகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தலின் போது, அவற்றின் பொதியிடல் அல்லது லேபிள்களில் குறிப்பிட்ட சில விபரங்களை அச்சிடுவதைக் கட்டாயமாக்கி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் புதிய கட்டளைகளை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 10(1) (அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டளையானது உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துவோர் மற்றும் வர்த்தகர்களுக்குப் பொருந்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தொடர்புடைய உற்பத்திப் பெயர் தடித்த எழுத்துக்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது அவற்றில் ஏதேனும் இரண்டு மொழிகளில் பிரதான சட்டகத்திலும் (Main panel), மற்றைய மொழியில் வேறு ஏதேனும் ஒரு சட்டகத்திலும் குறிப்பிடப்பட வேண்டும்.
பொதியிடப்படும் சந்தர்ப்பத்தில் உற்பத்தியில் அடங்கியுள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவு சதவீதமாக (%), தெளிவாகவும் வெளிப்படையாகவும் 2 மில்லிமீற்றருக்கு (2 மி.மீ) குறையாத தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும்.
இந்த புதிய ஒழுங்குவிதிகள் குழந்தை சவர்க்காரம் , உடலுக்குப் பயன்படுத்தும் சவர்க்காரம் , முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம் , சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் ஆகியவற்றிற்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த ஏற்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
