Jul 17, 2026 - 02:04 PM -
0
சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் உள்ள ஒரு பகுதியில் இன்று ()ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலச்சரிவினால் மலைச்சரிவின் கீழ் பகுதியில் இருந்த பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
பூர்வாங்க தகவல்களின்படி, பெங்ஷுய் கவுண்டியைச் சேர்ந்த சமூக நலப் பணியாளர் ஒருவர் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 8.00 மணிளவில் ஆங்காங்கே கற்கள் உருண்டு விழுவதைக் கண்டு, உடனடியாக அவசர எச்சரிக்கை விடுத்ததாக அரசு ஊடகமான CCTV தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, 60-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், அவர்கள் வெளியேற்றப்படும் பணியில் ஈடுபட்டிருந்த போதே, காலை 9:08 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு சிலர் மண்ணுக்குள் புதைந்தனர்.
மண்ணுக்குள் சிக்கியவர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வரை இடிபாடுகளுக்குள் இருந்து ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவு ஏற்பட்டதற்கான உடனடி காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
CCTV வெளியிட்ட வான்வழிப் படக்காட்சிகள், ஆற்றங்கரையில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் மீது பாறைகளும் இடிபாடுகளும் விழுவதைக் காட்டுகின்றன.
அதே நேரத்தில் மக்கள் தங்களுக்குப் பின்னால் எழும் அடர்ந்த தூசிக் கூட்டத்திற்கு மத்தியில் தப்பி ஓடுவதையும் காண முடிகிறது.
காணொளி ஒன்றில் மலையின் ஒரு பகுதி சரிந்து கீழே உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மீது விழுவதையும், இதனால் இடிபாடுகள் சாலையில் சிதறி, அவ்வழியாகச் சென்ற கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உடனடியாக நிறுத்தப்படுவதையும் காட்டுகிறது.
சம்பவ இடத்திற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள சீனாவின் அவசரக்கால முகாமைத்து அமைச்சகம் இரண்டாம் நிலை அவசரக்கால நடவடிக்கையை செயல்படுத்தி, 100 பேர் கொண்ட மீட்புக் குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக சீனாவின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த சுமார் 206 பணியாளர்கள் மற்றும் 49 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
