Jul 17, 2026 - 03:34 PM -
0
கர்நாடக மாநிலம் பண்ட்வால் தாலுகா காக்யபாடா அருகே கொடங்கே பகுதியை சேர்ந்தவர் பாலப்பா கவுடா. இவரது மகள் லாவண்யா (வயது 22). இவர் கல்லடுக்காவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இவர் தினமும் வேலைக்கு பஸ்சில் சென்றுவிட்டு திரும்பி வந்தார். இந்த நிலையில் லாவண்யாவை தூரத்து உறவினரான சேத்தன் (25) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் சேத்தன் அவரை பின்தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால், சேத்தனை, லாவண்யா திட்டியதுடன் தனது பின்னால் சுற்ற வேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சேத்தன் ஆத்திரம் அடைந்தார். மேலும் லாவண்யாவை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நேற்று (16) வழக்கம் போல வேலைக்கு சென்ற லாவண்யா, மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு திரும்புவதற்காக பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் காக்யபாதவி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
அந்த சமயத்தில் சேத்தன் பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் சேத்தன், லாவண்யா அமர்ந்திருந்த பஸ்சில் ஏறி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இதனால் ஆத்திரம் அடைந்த சேத்தன், தான் பையில் வைத்திருந்த அரிவாளை வெளியே எடுத்தார். இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்த லாவண்யா பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார்.
ஆனாலும் சேத்தன் அவரை விடாமல் அரிவாளை கையில் வைத்தப்படி பின் தொடர்ந்து விரட்டி சென்றார். ஒரு கட்டத்தில் பஸ் நிலையத்துக்குள் தவறி விழுந்த லாவண்யாவை அவர் அரிவாளால் பலமுறை கொடூரமாக வெட்டினார். இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்த லாவண்யா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை உறுதி செய்த பிறகு சேத்தன், அரிவாளை பஸ் நிலையத்திலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பட்டப்பகலில் பஸ் நிலையத்தின் நடுவில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். இதுபற்றி பொலிஸாரருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பொலிஸார் கொலையான லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சேத்தனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
