Jul 17, 2026 - 03:49 PM -
0
பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன்போது, முறைப்பாடு தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிநடத்தலின் கீழ், முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
யோஷித ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் முன்னிலையாகி சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணையை இம்மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளைக் கொள்வனவு செய்ததன் மூலம், பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
