Jul 17, 2026 - 05:41 PM -
0
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை நேரில் பார்ப்பதற்காக இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவின் பெற்றோர் குருநாத் சர்மா மற்றும் பூர்ணிமா இருவரும் லண்டன் வந்துள்ளனர். இதனால் ரோகித் சர்மா தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் ஆடுகிறாரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (19) லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இதனால் கடைசி போட்டியில் வெல்லும் அணியால் தொடரை கைப்பற்ற முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. இதனிடையே ரோகித் சர்மா ஓய்வு முடிவை எடுத்துவிட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
கடந்தப் போட்டியின் போதே ரோகித் சர்மா முடிவு எடுத்துவிட்டதால், அவரின் கிரிக்கெட் சாதனைகள் தொடர்பாக தொடர்ந்து காட்டப்பட்டு கொண்டே இருந்தது.
அதேபோல் ரோகித் சர்மா ஆட்டமிழந்த பின், விராட் கோலி மற்றும் பும்ராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் ரோகித் சர்மா அடுத்தப் போட்டியுடன் ஓய்வு பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியது.
39 வயதை ரோகித் சர்மா எட்டிவிட்ட சூழலில், அடுத்த உலகக்கோப்பையின் போது 40 வயதை எட்டிவிடுவார். இதனால் ரோகித் சர்மா ஆட்டம் மீதான சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனால் ஜெய்ஸ்வாலை இப்போதே உள்ளே கொண்டு வர கம்பீர் மற்றும் அகர்கர் கூட்டணி தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் லார்ட்ஸில் நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியுடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை ரோகித் சர்மாவுக்கு நெருக்கமான பலரும் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் ரோகித் சர்மா பெற்றோரான குருநாத் சர்மா மற்றும் பூர்ணிமா இருவரும் லண்டன் வந்துள்ளதாக தகவக் கிடைத்துள்ளது. இதனால் ரோகித் சர்மா ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போவது நிச்சயம் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். கடைசி போட்டியில் ரோகித் சர்மா ஒரு மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்றும் தங்களின் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் நாளை மறுநாள் இந்திய கிரிக்கெட்டுக்கு மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.
