Jul 17, 2026 - 10:07 PM -
0
மெக்சிகோவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ மற்றும் குவாத்தமாலாவின் அருகிலுள்ள கடற்கரையோரங்களில் அலை மட்டத்திற்கு மேல் 0.3 முதல் 1 மீட்டர் (1-3 அடி) வரையிலான "அபாயகரமான சுனாமி அலைகள்" ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் "மிதமான தீவிரத்துடன்" உணரப்பட்ட போதிலும் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஒக்சாகாவின் (Oaxaca) ஆளுநர் சலோமன் ஜாரா குரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலும் கட்டிடங்களை உலுக்கியுள்ளதாகவும், குவாத்தமாலா நகரில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு சென்றுள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவின் மீன்பிடி நகரமான புவேர்ட்டோ மடிரோவிற்கு (Puerto Madero) அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 15.2 கிலோமீட்டர் (9 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், எல் சால்வடார், நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களில் சுனாமி அலைகள் 0.3 மீட்டருக்கும் குறைவான அளவிலேயே இருக்கும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள அரசாங்க முகவர் நிலையங்கள் ஆபத்தில் உள்ள மக்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் "தகவல்களைப் பெறுவதில் விழிப்புடன் இருக்குமாறும், தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும்" அறிவுறுத்தியுள்ளது.
