Jul 21, 2026 - 08:59 AM -
0
டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 77,000 ஐ கடந்துள்ளது.
இதற்கமைய, நேற்று (20) ஒரே நாளில் 984 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் 162 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்து அதிஅபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களில் நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதுடன், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,537 நோயாளர்களும், ஜூலை மாதத்தின் கடந்த 20 நாட்களில் மட்டும் 21,650 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.
மாகாண மட்டத்தில் ஆராயும்போது, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அது மொத்த நோயாளர்களில் 52.67% அதாவது 40,573 நோயாளர்களாகும்.
தென் மாகாணத்தில் 11,867 நோயாளர்களும் (15.41%), மத்திய மாகாணத்தில் 6,492 நோயாளர்களும் (8.43%) பதிவாகியுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாவட்டமாக கம்பஹா மாவட்டம் காணப்படுவதுடன், அங்கிருந்து 16,164 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 15,314 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
