Jul 21, 2026 - 10:28 AM -
0
பிரபல கன்னட டி.வி. நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி. இவர் கன்னட 'பிக்பாஸ்' மூலம் பிரபலமானார். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா சிந்தோகி, பெங்களூரு சஞ்சய் நகர் பொலிஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,
சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக போலி கணக்குகள் மூலம் எனக்கு அவதூறான கருத்துகள் அனுப்புவது, இழிவுப்படுத்தும் செய்திகளை வெளியிடுவது என தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகிறேன். இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற துன்புறுத்தலை எதிர்கொண்டேன். அப்போதும் இதுபற்றி சஞ்சய்நகர் பொலிஸில் புகார் அளித்தேன்.
அதன்பிறகு இதுபோன்ற தொல்லைகள் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் கடந்த 2 மாதங்களாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறேன். எனக்கு நன்கு அறிமுகமான நபர் ஒருவர் வேறொரு பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி தன்னை துன்புறுத்துவதாக சந்தேகம் உள்ளது. மன்னத் நகுல் என்பவரே சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சஞ்சய்நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நடிகைகள் ரம்யா மற்றும் ருக்மினி வசந்த் உள்ளிட்ட நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் தொல்லை கொடுப்பது தொடர்பாக புகார் அளித்துள்ள போதிலும், தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
