Jul 21, 2026 - 10:54 AM -
0
பல்வேறு தொழில்துறைகளில் உள்ள தொழில் வழங்குநர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க உயர்மட்ட வணிக அமைப்புகளில் ஒன்றான இலங்கைத் தொழில் வழங்குநர்கள் சம்மேளனத்தின் (EFC) தலைவராக, கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. மனதுங்கவின் இந்த நியமனமானது, இலங்கையின் வணிகத் துறைக்கு அவர் வழங்கிய தலைமைத்துவத்திற்கும் பங்களிப்பிற்கும் கிடைத்த ஒரு முக்கிய அங்கீகாரமாகும் என வங்கி தெரிவித்துள்ளதுடன், இது தேசிய பொருளாதார மற்றும் வர்த்தக மேம்பாட்டு முயற்சிகளில் அவரது ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் மிகவும் மதிக்கப்படும் தலைவரான திரு. மனதுங்க, வங்கி மற்றும் நிதித்துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலான தனது அனுபவத்தை இந்த கௌரவமிக்க பதவியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
திரு. மனதுங்க அவர்களின் இந்நியமனமானது, பரந்த வணிகச் சமூகத்தில் அவரின் உயரிய கௌரவத்தைப் பிரதிபலிப்பதுடன், தலைமைத்துவ மற்றும் ஆலோசனைப் பொறுப்புகளில் அவர் பெற்றுள்ள பரந்த அனுபவப் பின்னணியையும் பறைசாற்றுகிறது.அவர் இலங்கை வங்கிகள் சங்கத்தின் (SLBA) தலைவராகச் செயற்படுவதுடன், UNICEF வர்த்தக மன்றம், இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் தனியார் துறை ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் துறைசார் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இலங்கை மத்திய வங்கியின் பங்குதாரர் ஈடுபாட்டுக் குழுவில் (Stakeholder Engagement Committee) பதவி வழி (Ex-Officio) உறுப்பினராகச் செயலாற்றுவது உட்பட, பல ஒழுங்குமுறை மற்றும் ஆலோசனைசார் முக்கிய பங்களிப்புகளையும் இவர் வழங்கி வருகின்றார்.
திரு. மனதுங்க, Commercial Development Company PLC மற்றும் Commercial Bank of Maldives (Pvt) Ltd ஆகியவற்றின் பிரதித் தலைவராகவும் செயற்படுகின்றார். அவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கொமர்ஷல் வங்கியில் பணியாற்றி வருவதுடன், பிரதம செயற்பாட்டு அதிகாரி மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்ததன் பின்னர், 2022 மே மாதத்தில் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA) உறுப்பினரான திரு. மனதுங்க, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் அவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் (IBSL), இலங்கை பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ நிறுவனம் (CMI) ஆகியவற்றின் உறுப்பினராகவும் திகழ்கிறார். அவர் இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் (SLID) உறுப்பினராகவும் உள்ளதுடன், வங்கித்துறை இடர் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் சபை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளின் ஊடாக வங்கித் துறையின் மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்களிப்பினை வழங்கியுள்ளார். அத்துடன், அவர் முன்னணி கல்வி மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் வருகைதரு விரிவுரையாளராகவும் வளவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
