Jul 27, 2026 - 10:20 PM -
0
ஹொரணை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி படுகாயப்படுத்தியதாகக் கூறப்படும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையைப் பார்ப்பதற்காக மதுபோதையில் வந்த சந்தேகநபர், வைத்தியசாலை ஊழியர்களை வசைபாடி ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அந்த நேரத்தில், வைத்தியசாலையின் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அவரை வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவித்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் அங்கேயே தங்கியிருந்துள்ளார்.
அதன்பின்னர், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அவரை வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த வைத்தியசாலை பொலிஸ் சார்ஜன்ட் தலையிட்டபோது, சந்தேகநபர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு முன்னர் சந்தேகநபருக்கும் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட்டின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வைத்தியசாலையின் ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரையும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரையும் சந்தேகநபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் காரில் தப்பிச் சென்றுள்ள நிலையில், அந்த நேரத்தில் வைத்தியசாலையின் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபர் தப்பிச் சென்ற காரின் இலக்கத்தைப் புகைப்படம் எடுத்துள்ளதால், விசாரணைகளுக்கு முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் நடந்த போது சந்தேகநபரின் தந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, ஹொரணை பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் ஹொரணை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
