Jul 30, 2026 - 05:05 PM -
0
போயஸ் கார்டனில் வீடு இருந்த நடிகர் மோகன் சர்மா, தற்போது ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கிறார். ரஜினிகாந்த் ஒரு லட்சம் ரூபாய் உதவி செய்துள்ளார்.
தமிழ் உட்பட தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர், புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற முதல் தென்னிந்தியர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இப்போது ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் ஆதரவு இல்லாமல் வசித்து வருகிறார். ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் அவருக்கு வீடு இருந்தது. ஆனால் இப்போது ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கக் காரணம் என்ன?.
அவர் தான் மோகன் சர்மா. தமிழில் பிரபலமான நடிகையாக இருந்த லட்சுமியின் முன்னாள் கணவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த மோகன் சர்மா, புனே திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் தென்னிந்தியர். படிப்பை முடித்த கையோடு மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஜெய்சங்கர் தொடங்கி சிவாஜி, அஜித், பிரசாந்த், விஜய், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோரின் படங்களில் நடித்திருக்கிறார்.
தனது முதல் படத்தில் தன்னுடன் நடித்த லட்சுமியை காதலித்து திருமணம் செய்த மோகன் சர்மா, பின்னாளில் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து படங்கள் இயக்குவது, சினிமாவில் நடிப்பது என இருந்த நிலையில் சினிமா வாய்ப்பு குறைந்த பின் தமிழ் சீரியல் பக்கம் நகர்ந்தார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கோலங்கள், முந்தானை முடிச்சு, வாணி ராணி, மாயா, தாலாட்டு என பல சீரியல்களில் நடித்தார்.
இடையில் இயக்குநர் அவதாரம் எடுத்த மோகன் சர்மா 2012 இல் நம்ம கிராமம் என்கிற படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்தார். இந்தப் படம் தமிழக அரசு மற்றும் கேரள அரசின் விருதுகளை வென்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி வரை பிரபலமாக அறியப்பட்ட மோகன் சர்மா 3 முறை தேசிய விருதுகள் வழங்கும் குழுவின் ஜுரியாக செயல்பட்டார்.
இப்படி திரை வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. முதலில் நடிகை லட்சுமியை திருமணம் செய்த மோகன் சர்மா அவருடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார். அதன்பின் விவாகரத்து பெற இரண்டாவதாக சாந்தி என்பவரை திருமணம் செய்தார்.
இந்த நிலையில் தனக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை எனக் கூறியிருக்கும் அவர், வெளியில் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்ததாகவும் ஒரு கட்டத்தில் தனது போயஸ் கார்டன் இல்லத்தை விற்றபோதும் அதிலும் சிக்கல்கள் எழுந்ததாக வருந்துகிறார்.
யார் துணையும் இல்லாத நேரத்தில் வயோதிகம் அவரை வதைக்க தன்னை பார்க்க ஆள் இல்லாத நிலையில் கஷ்டப்பட்ட மோகன் சர்மாவை சில ரோட்டரி கிளப் ஆட்கள் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து உதவி செய்துள்ளார்கள். அங்கே தங்க இடமும், உண்ண உணவும் கிடைக்கிறது என்றாலும், வயோதிகப் பிரச்சனைகளுக்கான மருந்து மாத்திரைகளுக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகக் கூறியிருக்கிறார்.
சில தினங்கள் முன்பு தனது நிலையைப் பற்றி கேள்விப்பட்டு நடிகர் ரஜினிகாந்த் ஒரு லட்ச ரூபாய் அனுப்பியதாகவும் அதனை வைத்துக் கொண்டு தான் தற்போது சமாளித்து வருவதாகவும் கூறும் மோகன் சர்மா, மிச்சமிருக்கிற காலத்துக்கு ஏற்றவாறு சினிமா துறையில் இருந்து யாராவது உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
