Jul 31, 2026 - 02:03 PM
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் கர்நாடகத்துக்கு எதிராக செயல்படும் தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை திரையிடக் கூடாது என கோஷமிட்டனர்.
காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகா மறுத்து வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கவேண்டும் என்று கடந்த 28 ஆம் திகதி உத்தரவிட்டது.
இதை கண்டித்தும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 4 ஆவது நாளாக இன்று (31) மண்டியா, மைசூரு, பெங்களூரு உள்பட பல இடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் திரையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சாம்ராஜ்நாகரில் உள்ள பசவேஸ்வரா திரையரங்கில் இன்று ஜனநாயகன் படம் திரையிடப்பட இருந்த நிலையில், கன்னட அமைப்புகள் திரையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தன. இதனால், விஜய்யின் ஜனநாயகன் பட காட்சி இரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (30) மண்டியா டவுனில் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள குருஸ்ரீ தியேட்டரை முற்று கையிட்டு விஜய்சேனா என்ற கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்கள், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். மேலும் கர்நாடகம் அரசு எந்தவித அழுத்தத்துக்கும் அடிபணியக் கூடாது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கோஷமிட்டனர். அதன்பிறகு போராட்டக்காரர்கள், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு எதிராக செயல்படும் தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை திரையிடக் கூடாது என கோஷமிட்டனர்.
அந்த சமயத்தில் தியேட்டரில் காலை 10 மணி காட்சி திரையிடப்பட்டு இருந்தது. இதையடுத்து போராட்டக்காரர்களுடன், தியேட்டர் நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று 'ஜனநாயகன்' படத்தை உடனே நிறுத்துவதாக தியேட்டர் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி 'ஜனநாயகன்' படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

