Aug 2, 2026 - 02:36 PM
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 06 ஆம் திகதி மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் தற்போது மடு திருத்தலத்தில் வந்து தங்கியுள்ளனர்.
அவ்வாறு மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார் சைக்கிளை அவர் தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது, வீதி தடையை கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

