Aug 2, 2026 - 03:19 PM
அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையிற்கு அதிக திறனுள்ள தொழிலாளர்களை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைவதை எளிதாக்குவதற்காக, அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கும் நடைமுறைக்கு பதிலாக, 2027 ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சின் ஊடாக நேரடியாக மாவட்டத்திற்கு நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இங்கு தெரிவித்தார்.
மேலும், மாவட்ட மட்டத்தில் சுற்றுலாத்துறையின் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்காக, மாவட்ட செயலாளரின் தலைமையில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார் அடங்கிய உப குழுவொன்றை நியமித்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அறுகம்பை சன்செட் வியூ' (Sunset View) இடத்தை அபிவிருத்தி செய்ய 173 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பாழடைந்து வரும் அரச விடுதிகளை (Circuit Bungalows) அரச-தனியார் பங்களிப்புடன் (Public-Private Partnership) சுற்றுலா விடுதிகளாக நடாத்திச் செல்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இதுதவிர, கிழக்கு மாகாணத்தில் காணப்படுபடும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்து அபிவிருத்திக்கு உட்படுத்துவதற்கும் விசேட அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் மனிதவள மேம்பாட்டிற்காக, அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் பயிற்சிகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிராந்திய அலுவலகமொன்றை அடுத்த ஆண்டில் அம்பாறையில் நிறுவுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை ஹோட்டல் பாடசாலை மற்றும் சமூர்த்தி அமைச்சு இணைந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சுற்றுலாத் துறையில் இலவசப் பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை அம்பாறையில் இருந்து தொடங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட செயலாளர் மற்றும் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

