Aug 4, 2026 - 10:37 AM
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காகவும், பயன்பாட்டுக்காகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைகளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகலாதன் தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் நேற்று (03) மாலை குறித்த இளைஞரின் வீட்டைச் சோதனையிட்டனர்.
இதன்போதே, வைத்தியப் பரிந்துரைகள் ஏதுமின்றி சட்டவிரோதமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரும் அதே இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதுடைய சந்தேகநபரிடம் சாய்ந்தமருது பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரைச் சான்றுகளுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





























