Aug 5, 2026 - 12:43 PM
பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாக்கூர், தனது புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப் பேக் (Deep fake) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட மிருணாள் தாக்கூர், தனது உருவம் அல்லது அடையாளத்தை பயன்படுத்தி டீப் பேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதும், பகிர்வதும் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பெயர், புகைப்படம் அல்லது உருவத்தை தவறாக பயன்படுத்தும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"எனது அடையாளத்தை தொடர்ந்து தவறாக பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மிருணாள் தாக்கூர் தனது பதிவில் தெளிவாக எச்சரித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபலங்களின் உருவங்களை பயன்படுத்தி போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தனியுரிமை மற்றும் அடையாளப் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.

