Aug 6, 2026 - 12:43 PM
ஊழலுக்கு எதிரான சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய பிரகடனங்களை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த சட்டமூலம் மீண்டும் திருத்தப்படும்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
"2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழலுக்கு எதிரான சட்டம் என்பது எமது நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு சட்டமாகும். அந்தச் சட்டத்தின் 86 மற்றும் 88 ஆம் பிரிவுகளின்படி, எமது நாட்டின் உயர் அதிகாரிகள், அரசியல் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைவரும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களில் தமது தகவல்களை உள்ளடக்க வேண்டும் என்பதாகும். அதற்கமைய, அந்தச் சட்டத்தின்படி ஜனாதிபதி முதல் கீழ்மட்டம் வரை சுமார் 300 பேர் வரை இந்தத் தகவல்களைச் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களில் அனைத்தையும் வழங்க வேண்டியிருந்தது. அது அச்சிடப்பட்ட வடிவில் வழங்கப்பட வேண்டியிருந்தது. அதன் பின்னர், அதனை வழங்குவதற்கான முறையை நிகழ்நிலையில் (Online) வழங்குவதற்காக அது திருத்தப்பட்டது..." என்றார்.





