Aug 6, 2026 - 03:40 PM
நியுயோர்க்கை தளமாகக் கொண்ட கலைஞரும் ஆராய்ச்சியாளருமான அபிராமி, சென்னை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மகிமையை வெளிப்படுத்தும் வகையில், சமஸ்கிருதம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நவீன இசை தயாரிப்புடன் இணைத்து உருவாகியுள்ள கபாலி எனும் இலத்திரனியல் இசைப் படைப்பை அண்மையில் வெளியிட்டுள்ளார். அவரது முதலாவது இசை தயாரிப்பாக வெளிவந்துள்ள இந்த வெளியீடு, இலங்கை மற்றும் இந்தியப் பின்னணி, துபாயில் வளர்ந்த சூழல் மற்றும் நியுயோர்க் வாழ்க்கை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட தென்னாசிய இசைத் தாக்கங்கள் மற்றும் நவீன இலத்திரனியல் இசையின் (electronica) தனித்துவமான கலவையை வெளிப்படுத்துகிறது.
இரண்டு அத்தியாயங்களாக வெளிவந்துள்ள கபாலி, அதன் முதலாவது அத்தியாயம், திரைப்பட பாணியிலான மூல இசை அமைப்பையும், பாடலின் பின்னணியிலுள்ள கதையை வெளிப்படுத்தும் உரைநடை சார்ந்த மீளமைப்பையும் கொண்டுள்ளது. இரண்டாவது அத்தியாயம், அந்த இசைக்கருப்பொருள்களை அதிக bass கொண்ட future rave remix வடிவமாக மாற்றியமைத்துள்ளது.
தனது பாட்டி சாந்தா கன்னையனின் மறைவைத் தொடர்ந்து, 2026 மார்ச் மாதத்தில் அவர் சென்னைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கிடைத்த அனுபவங்கள் இந்த இசைத் தொகுப்பிற்கு உத்வேகமாக அமைந்தன. இந்த புதிய வெளியீடு குறித்து கருத்துத் தெரிவித்த அபிராமி: “கபாலி என்பது அழிவு மற்றும் அதிலிருந்து வெளிவரக்கூடிய மறுமலர்ச்சி பற்றியது. எனது வளர்ப்பில் மட்டுமல்லாது, எனது பெற்றோரின் மற்றும் எனது பாட்டி-பாட்டனார்களின் வாழ்க்கையிலும் அங்கமாகத் திகழ்ந்த ஒரு இடத்திற்குத் திரும்பியமை, பல தலைமுறைகளாக அந்த கோயில் வளாகத்தைக் கடந்து சென்றுள்ள பல்வேறு மனிதர்களையும், ஒரே மனிதர்களின் மாறுபட்ட பரிமாணங்களையும் பற்றி என்னைச் சிந்திக்க வைத்தது. ஒரு காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், நாம் யாராக இருந்தோம், இப்போது யாராக இருக்கிறோம் என்பதைப் பற்றிய சிந்தனையை அது தூண்டியது.” எனக் குறிப்பிட்டார். அவரது இவ்விஜயம், மயிலாப்பூரின் வீதிகள் பாடலாலும் நடனத்தாலும் திரண்டு கோலாகலமாகக் கொண்டாடிய தேர்த் திருவிழா போன்று காணப்பட்டது. இந்த அனுபவம், அவரது தனிப்பட்ட துயரத்திற்கும் கூட்டு மகிழ்ச்சிக்கும் இடையே ஒரு சக்திவாய்ந்த முரண்நிலையை உருவாக்கியதுடன், இறுதியாக இப்பாடல்களின் உணர்வுப்பூர்வமான அடித்தளத்தையும் வடிவமைத்தது.
ஆராய்ச்சித் துறையிலான தனது பின்னணியைப் பயன்படுத்தி, அபிராமி தனது கபாலி படைப்பை சுய சிந்தனை மற்றும் அவதானிப்பு ஆகிய இரண்டின் ஊடாகவும் அணுகியுள்ளார். மனித வளர்ச்சி குறித்து ஆராயும் அவரது பணிகள், அவரது படைப்பாக்க முறைக்கு வழிகாட்டியதுடன், துயரத்தைக் கடந்து யோசிக்கவும், நினைவுகள், கலாச்சாரம் மற்றும் அடையாளம் என்பன தலைமுறைகளைக் கடந்து எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைச் சிந்திக்கவும் தூண்டியிருந்தன.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக துபாயில் பாடலெழுதுதல் மற்றும் நேரலை இசை நிகழ்ச்சிகள் வாயிலாக அவரது கலைப் பயணம் தொடங்கியிருந்த போதிலும், அபிராமியின் சுய தயாரிப்பில் வெளிவந்துள்ள முதலாவது இசை வெளியீடான கபாலி, அவரது கலைப் பயணத்தின் ஒரு முக்கிய பரிணாம வளர்ச்சியாகக் குறிக்கப்படுகிறது. மூன்று மாத காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட கபாலி, அபிராமி கபாலீஸ்வரர் கோயிலை உணர்ந்த பல்வேறு பரிமாணங்களை - ஒரு காயமாக, ஒரு நினைவாக மற்றும் இறுதியாக ஒரு விடுதலையாக - வெளிப்படுத்தும் மூன்று பாகங்களைக் கொண்ட ஒரு இசைப் படைப்பாக உருவாக்கப்பட்டது. கபாலி மற்றும் அதன் future rave remix ஆகியவை தற்போது அனைத்து முன்னணி streaming தளங்களிலும் கிடைக்கின்றன.





