Aug 7, 2026 - 10:08 AM
அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (06) மாலை அக்கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அக்கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைவாக, இம்முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இந்நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நினைவேந்தல் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான காந்தன், தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.





