Aug 7, 2026 - 03:27 PM
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகள் மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுடனான மோதல்களை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் நீண்ட காலத்திற்கு இவ்வாறு தொடர்ந்து செயல்பட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போதைய சூழ்நிலை குறுகிய காலத்தில் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களில் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்க படைகள் தொலைதூர ஏவுகணைகள் உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் உலகளாவிய ஆயுத இருப்பிற்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவிடம் சில வகை ஆயுதங்கள் தாராளமாக உள்ளபோதிலும், குறிப்பிட்ட சில வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகளின் இருப்பு வரம்பிற்குட்பட்ட அளவிலேயே உள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், இது அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது இராணுவ நடவடிக்கைகளுக்கோ எந்தவித தடங்கலையும் ஏற்படுத்தாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.





