Aug 15, 2026 - 03:46 PM

பாலிவுட்டில் பிரபலமான தம்பதிகளில் ஒருவராக வலம் வருபவர்கள் கௌஹர் கான் - சைத் தர்பார். சமூக வலைதளங்களில் எப்போதும் தங்களது காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வரும் இந்த ஜோடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில், இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தங்களது திருமண வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நேஹா தூபியா மற்றும் அங்கத் பேடி தொகுத்து வழங்கும் 'டபிள் டேட்' நிகழ்ச்சியில் கௌஹர் கான் மற்றும் சைத் தர்பார் ஜோடியாக பங்கேற்றுள்ளனர்.
அப்போது இருவரும் தங்களது வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். இதில் குறிப்பாக, கணவரின் சில வித்தியாசமான பழக்கங்களை கௌஹர் கான் வெளிப்படையாக கூறியது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தங்களது திருமண நாளை நினைவுகூர்ந்த கௌஹர் கான், நிகாஹ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தையும் சிரித்தபடி பகிர்ந்துள்ளார். திருமண புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், திருமண சடங்குகளை நடத்துவதற்காக மௌலானா வந்து சேர்ந்தாராம்.
அந்த நேரத்தில் திடீரென சைத் தர்பார் கழிவறைக்கு ஓடிவிட்டதாக கௌஹர் தெரிவித்துள்ளார்.
தனது கணவருக்கு இருக்கும் வித்தியாசமான பழக்கம் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். சைத் தர்பாருக்கு தனது அக்குள்களின் வாசனையை மோப்பம் பிடிப்பது பிடிக்கும் என்றும், அடிக்கடி தனது அக்குள்களைத் தொட்டு வாசனை பார்ப்பார் என்றும் கௌஹர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "சைத்திற்கு எனது அக்குள்கள் எப்போதுமே நல்ல வாசனையுடன் இருப்பதாகத் தோன்றும். அவர் அடிக்கடி அதைத் தொட்டு மோப்பம் பிடிப்பார். அதன்பிறகு தனது சகோதரியிடம் சென்று, 'பார், அவளிடம் இருந்து எவ்வளவு நல்ல வாசனை வருகிறது' என்று சொல்வார். இதைக் கேட்டு அவரது சகோதரி, 'நீங்கள் இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்பார்" என்று கௌஹர் சிரித்தபடி தெரிவித்துள்ளார்.
கௌஹர் கான் மற்றும் சைத் தர்பார் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்ப வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் இந்த ஜோடி, தற்போது தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் இத்தகைய சுவாரஸ்யமான விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.























