Aug 20, 2026 - 06:43 PM





இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்.
தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி அளுத்கம, லெவந்துவ பகுதியில் பிறந்த நந்தா மாலினி, சிறுவயதிலிருந்தே தனது பாடும் திறமையை வெளிப்படுத்தினார்.
தனது வளரிளம் பருவத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதிக்கு வருகை தந்த அவர், ஸ்ரீ குணானந்த வித்தியாலயத்தில் இணைந்தார். அங்கு அவரது பாடும் திறமையைக் கண்டறிந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் அவருக்கு இசைத் துறையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.
கவிதைப் போட்டியொன்றில் அவரது திறமையைக் கண்டறிந்த ஆசிரியை ஒருவர், கருணாரத்ன அபேசேகரவால் நடத்தப்பட்ட அன்றைய புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியான "லமா மண்டபய"விற்கு நந்தா மாலினியை அறிமுகப்படுத்தினார்.
அங்கு அவர் பாடிய "புது சாது" என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அவரது இசைப் பயணத்தில் ஒரு புதிய பாதை திறக்கப்பட்டது.

























