Aug 21, 2026 - 07:55 AM





கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஒத்தாசை வழங்கிய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிசைக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இந்த கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், குறித்த கொலை தொடர்பில் கல்கிசைக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
குறித்த விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், இந்த இரு சந்தேக நபர்களும் நேற்றுமுன்தினம் (19) இரவு கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பிள்ஸ் வீதிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 20 மற்றும் 23 வயதுடைய கல்கிசைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களில் ஒரு சந்தேக நபர் 2025.05.05 அன்று கல்கிசை, சில்வெஸ்டர் வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை ஒன்றை புரிந்த குற்றத்திற்கும் உதவி ஒத்தாசை வழங்கியவர் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கமைவாக, இந்தக் குற்றம் தொடர்பில் இதுவரை பிரதான சந்தேக நபர், பெண் சந்தேக நபர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

























