Aug 26, 2026 - 09:22 AM





ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் வைத்திருந்த அனைத்துக் கண்ணிவெடிகளையும் அமெரிக்க கடற்படை அகற்றி அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், மீண்டும் கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் உடனடியாக அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானுடன் நிதித் தொடர்பு வைத்துள்ள நாடுகள் தனிமைப்படுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்யும் முக்கிய நாடான சீனா, அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான தடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தனது உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகக் கூறியுள்ளது.
பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது.
ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் தற்காலிகக் கடல்வழிப் பாதை அமைப்பது குறித்து ஈரான் ஆலோசித்து வருகிறது.
ஈரான் எல்லைக்குட்பட்ட நீர் வழியிலேயே வர்த்தகக் கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்றும், இராணுவக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஈரான் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக மூடப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.























