Sep 4, 2026 - 06:18 PM

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான ஹேமந்த லலித் டி சில்வா ஆகிய சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேகநபர்களை தலா 25 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
பொல்கொல்ல, மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்திற்காக நாற்காலிகளைப் பெற்றுக்கொள்வதில் குறைந்த விலையைக் கோரிய நிறுவனத்திடமிருந்து அவற்றைக் கொள்வனவு செய்யாமல், வேறு ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்ததன் மூலம் அரசுக்கு 79 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தி ஊழல் புரிந்தமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் இந்த சந்தேகநபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணைகள் நிறைவடையாததால் இந்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியது.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ் மற்றும் சட்டத்தரணி ரத்வத்தே ஆகியோர் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், இந்த சந்தேகநபர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் எனத் தெரிவித்தனர்.
அதன்படி சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்கும் அளவிற்கு எந்தவொரு காரணமும் முன்வைக்கப்படாததால், பிணைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு அந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரினர்.
இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்சச் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் குற்றம் புரியப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலிக்கும் போது பிணைச் சட்டத்தின் கீழ் இந்த சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை நிராகரிக்கும் அளவிற்கு காரணங்கள் முன்வைக்கப்படாததால், சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க தீர்மானிப்பதாக நீதவான் தனது உத்தரவை அறிவித்தார்.
அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு அழைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.



























