Sep 6, 2026 - 08:14 PM

நாட்டின் அந்நிய செலாவணி நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தும் ஒகஸ்ட் மாதத்தில் இலங்கை மத்திய வங்கி (CBSL) உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையிலிருந்து 579 மில்லியன் அமெரிக்க டொலர்களை உள்வாங்கியுள்ளது.
இந்த நிகர உள்வாங்கல், உள்நாட்டுச் சந்தையிலிருந்து மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களைக் கொள்முதல் செய்ததைப் பிரதிபலிப்பதுடன், உத்தியோகபூர்வ கையிருப்பு மட்டங்கள் மேம்பட்டு வரும் பின்னணியிலேயே இது இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டிகளின்படி, சீன மக்கள் வங்கியின் (PBOC) நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் (swap arrangement) மூலம் கிடைத்த நிதியையும் உள்ளடக்கி, 2026 ஜூலை இறுதியில் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு தற்காலிகமாக 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், 2026 ஏப்ரல் இறுதியில் மத்திய அரசின் நிலுவையிலுள்ள கடன் 30.53 டிரில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது.
இதில் உள்நாட்டுக் கடன் 18.85 டிரில்லியன் ரூபாயாகவும், நிலுவையிலுள்ள வெளிநாட்டுக் கடனின் ரூபாய் பெறுமதி 11.68 டிரில்லியன் ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அரசுப் பிணையங்கள் சந்தையில், கடந்த வாரத்தில் 182 நாள் திறைசேரி உண்டியல்களின் வட்டி வீதத்தில் ஏற்பட்ட சிறிய வீழ்ச்சியைத் தவிர, முதன்மைச் சந்தையில் திறைசேரி உண்டியல் வட்டி வீதங்கள் பரவலாக ஸ்திரமாகவே காணப்பட்டன.
இரண்டாம் நிலை சந்தையில், திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறி வட்டி வீதங்கள் ஆகிய இரண்டும் சிறிய வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசமுள்ள திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் ரூபாய் பெறுமதி பரவலாக ஸ்திரமாக இருந்ததாகவும், அண்மைய திறைசேரி உண்டியல் ஏலத்தில் தேவைக்கு அதிகமாக 2.5 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.



























