Sep 7, 2026 - 09:25 AM

Clean Sri Lanka தேசியத் திட்டத்தின் வழிகாட்டலில், அரசு - தனியார் பங்களிப்புடன் நாட்டின் 100 ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் நவீனமயமாக்கப்படும் இரண்டாவது ரயில் நிலையமாக, ஹிங்குரக்கொட ரயில் நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தும் "கனவு இலக்கு" திட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் பங்கேற்புடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"கனவு இலக்கு" திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட கதுருவெல ரயில் நிலையம் ஏற்கனவே மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
கிழக்கு ரயில் பாதையில், கல்ஓயா மற்றும் பொலன்னறுவை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ஹிங்குரக்கொட ரயில் நிலையம், குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வந்த, கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக எவ்வித அபிவிருத்தியும் காணாத ஒரு ரயில் நிலையமாகும்.
பயணிகள் மட்டுமன்றி, பல்வேறு விவசாய உற்பத்திகளையும் பெருமளவில் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் இந்த ரயில் நிலையம், 40 மில்லியன் ரூபாய் செலவில் முழுமையாக நவீனமயமாக்கப்படவுள்ளது.

























