Sep 17, 2026 - 10:20 AM

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் நிலுவையிலிருந்த பணத்தகராறு தொடர்பான வழக்கின் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், அவ்வழக்கின் தீர்ப்பு பிரதியை வழங்குவதற்காக சந்தேகநபரால் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது.
பின்னர் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று (16) பிற்பகல் 3.35 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.





























