Sep 17, 2026 - 10:02 PM

முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, நீதித்துறை சுதந்திரம் மற்றும் பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டின் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ள நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக, சுமார் 80 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்ட பிரதிநிதித்துவ ஜனநாயகம் இல்லாமற்போகும் அபாயம் ஏற்படுவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தாம் பலமாக நம்புவதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் ஒருமித்த கூட்டமைப்பாக அணிதிரண்டு இந்த அறிக்கையில் கையெழுத்திடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தரணி சாகர காரியவசம், துமிந்த திஸாநாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன, டிலான் பெரேரா, ரவி கருணாநாயக்க, முஜிபுர் ரஹ்மான், அஜித் பி பெரேரா, தயாசிறி ஜயசேகர, எம்.ஏ. சுமந்திரன், ஜி.எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, சமன் ரத்னப்பிரிய, மைத்திரி குணரத்ன, வஜிர அபேவர்தன மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





























