Sep 18, 2026 - 08:24 AM

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.
குறிப்பிட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த 900 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மற்றைய நபர் தணமல்வில பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவர் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த 350 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஜீப் வண்டியை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வத்தளைப் பகுதியைச் சேர்ந்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
முடக்கப்பட்ட சொத்துக்கள் விபரம்
ஹுனுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 7 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு மாடி வீடும் (சுமார்: ரூ. 400 இலட்சம்)
ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 17 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு வீடுகளும் (சுமார்: ரூ. 300 இலட்சம்)
ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 5 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 50 இலட்சம்)
காந்தி மாவத்தை, ஹுனுபிட்டிய முகவரியில் அமைந்துள்ள 3 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 70 இலட்சம்)
ஸ்பேசியா ரக கார் (சுமார்: ரூ. 80 இலட்சம்)
விசாரணையின் படி, இச்சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த இச்சொத்துக்களை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த நபரும் சட்டவிரோதமாகக் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அவ்விசாரணையின் படி, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலில் உழைத்த சட்டவிரோதப் பணத்தில் கொள்முதல் செய்த சொகுசு ஜீப் வண்டியை (சுமார்: ரூ. 350 இலட்சம்) விற்பனை செய்வதையோ, பரிமாற்றம் செய்வதையோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதையோ தடுப்பதற்காக நேற்று (16) முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.





























