உலகம்
மியான்மர் நிலநடுக்கத்தில் 20 பேர் பலி

Mar 28, 2025 - 05:06 PM -

0

மியான்மர் நிலநடுக்கத்தில் 20 பேர் பலி

மியான்மரில் இன்று (28) நண்பகலில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியுள்ளன.

 

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

 

சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

மண்டலே நகரில் உள்ள ஒரு மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் உள்ளே சிக்கியுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

இந்த மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் கடுமையாக உணரப்பட்டது. தாய்லாந்தில் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

 

மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்க வங்க தலைநகர் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

 

சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05