Sep 30, 2024 - 12:05 PM -
0
வெலிவேரிய பிரதேசத்தில் மைக்ரோ ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான ‘பொடி லெசி’ என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க மற்றும் மீட்டியாகொட தசுன் ராஜகருணா ஆகியோரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாகி இருப்பது போல் காட்டி வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி மேலும் பல குற்றச்செயல்களுக்கு இவர் தயாராகி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
46 வயதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிவேரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள், மீகவத்தை பிரதேசத்தில் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 38 மில்லி மீற்றர் தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் சகாவான "தொட்டலங்க சான" என்பவருடன் சந்தேகநபர் தொடர்பில் இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.