Oct 16, 2024 - 02:23 PM -
0
2024/2025 காலப்பகுதிக்கான இலங்கை மலேசியா வியாபார சம்மேளனத்தின் (SLMBC) தலைவராக மர்ஷாத் பாரி நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமானா வங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. SLMBC இன் 30 ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடலின் போது இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிகழ்வு, ஹில்டன் ரெசிடென்ஸ், யூனியன் போல்ரூமில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஆதம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஆதரவுடன் SLMBC இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமானா வங்கியின் OrphanCare இன் பிரதி தலைமை அதிகாரியாக இயங்கும் மர்ஷாத் பாரி, இந்த புதிய நிலைக்கு அவசியமான பல அனுபவங்களைக் கொண்டுள்ளார். தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக, SLMBC இன் உப தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு அங்கத்தவராக இயங்கியுள்ளார். அதனூடாக இலங்கை மற்றும் மலேசியா இடையே உறுதியான வியாபார உறவுகளை கட்டியெழுப்புவதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தமது நிபுணத்துவ செயற்பாடுகளுக்கு அப்பால், பல்வேறு நிறுவனங்களுக்கு மர்ஷாத் பாரி பங்களிப்பு வழங்கியுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுகள் ரொட்டரி மாவட்டம் 3220 இன் உதவி ஆளுநராக செயலாற்றியுள்ளதுடன், தற்போது இலங்கை மற்றும் மாலைதீவுகள் ரொட்டரியின் பொது தோற்றப்பாட்டு மேம்படுத்தல் தலைமை அதிகாரியாக திகழ்கின்றார். கொழும்பு பல்கலைக்கழக ஊடகவியல் அமைப்பின் செயலாளராகவும், ஆசிய ஊடக கலாசார சம்மேளனத்தின் சர்வதேச செயலாளராகவும் திகழ்கின்றார். மேலும், இஸ்லாமிய கற்கைகள் நிலையத்தின் (CIS) பணிப்பாளராக மர்ஷாத் திகழ்வதுடன், மூர்ஸ் இஸ்லாமிய கலாசார இல்லத்தின் (MICH) வெளியுறவுகள் மற்றும் இளைஞர் விவகார தவிசாளராகவும் திகழ்கின்றார். OrphanCare இன் பிரதி தலைமை அதிகாரியாக, அநாதரவான சிறுவர்களுக்கு 18 வயது நிரம்பியதும் தமது வாழ்வில் இரண்டாவது தடவையாகவும் அநாதரவாக்கப்படுவதை தவிர்க்கச் செய்வதில் கவனம் செலுத்தும் இந்தத் திட்டத்தின் தாக்கம் மற்றும் வினைத்திறனை மேற்பார்வை செய்யும் பணியை முன்னெடுக்கின்றார்.
இந்த புதிய நிலை தொடர்பில் மர்ஷாத் பாரி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை மலேசியா வியாபார சம்மேளனத்தின் (SLMBC) தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றேன். எமது இரு நாடுகளுக்குமிடையிலான உறுதியான பொருளாதார மற்றும் கலாசார கைகோர்ப்புகளினூடாக, சிறந்த வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றத்தை எய்தக்கூடியதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும். இலங்கை மற்றும் மலேசியாவில் உறுதியான வளர்ச்சி மற்றும் கைகோர்ப்பை உறுதி செய்வதற்காக விறுவிறுப்பான அணியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.