செய்திகள்
கேபிள் கார் திட்டத்தை தடுக்க முடியாது

Oct 16, 2024 - 03:57 PM -

0

கேபிள் கார் திட்டத்தை தடுக்க முடியாது

அம்புலுவாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு கம்பளை பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தனது திட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து, தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பி. குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

 

மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நீதிமன்றில் காரணங்களை முன்வைத்த போது, அனைத்து அரச நிறுவனங்களும் கேபிள் கார் திட்டத்திற்காக பூரண அனுமதி வழங்கியுள்ள போதிலும் கம்பளை பிரதேச செயலாளர் இதற்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டினார்.

 

போதிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி பல்வேறு தடைகள் போடப்படுவதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஊடகங்களில் பாரியளவில் விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

 

இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் பிரதேசம் முழுமையாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்டது எனவும் அதன் விடயங்களில் தலையிட கம்பளை பிரதேச செயலாளருக்கு அதிகாரம் இல்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

 

இந்த இடையூறுகள் காரணமாக குறித்த திட்டத்தினை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவது சாத்தியமற்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, குறித்த திட்டத்திற்கு இடையூறு மற்றும் முறையற்ற தலையீடுகளை தடுக்க இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05