Oct 16, 2024 - 06:35 PM -
0
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே இவ்விவகாரத்தை மீண்டும் கனடா கிளப்பியுள்ளது.
நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இந்திய தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.
அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தர விட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா பரிசீலிக்குமா என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலியிடம் நிரு பர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், எல்லாம் மேஜையில் உள்ளது என்று பதிலளித்தார். பொருளாதார தடை தொடர்பாகவும் ஆலோசனை உள்ளது என்ற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.