Oct 22, 2024 - 02:54 PM -
0
ஜீப் வண்டியில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்ட மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
எஹலியகொட, பரகடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த குழுவினர் உயிரிழந்த நபரின் மகன் மீது அமிலவீச்சு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 19ஆம் திகதி மாலை ஜீப் வண்டியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவித்துக் கொண்டு குழுவொன்று பரகடுவ எஹெலியகொடவில் அமைந்துள்ள வீடொன்றுக்கு வந்துள்ளனர்.
வீட்டில் இருந்த இளைஞன் ஒருவர் மீது அமில வீச்சு தாக்குதலை மேற்கொண்டு, கைவிலங்கிட்டு பலவந்தமாக அழைத்துச் செல்ல அந்த கும்பல் முற்பட்ட போது, அவரது தந்தை அதனை தடுக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, தந்தை ஜீப்பில் தொங்க முற்பட்ட நிலையில், ஜீப்பினை நிறுத்தாமல் செலுத்தியதால் அவர் அதிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த தந்தை மீது ஜீப் வண்டியின் சில்லுகள் ஏறியதில் அவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 65 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட மகன் காயங்களுடன் வீதியில் விட்டுக் செல்லப்பட்டுள்ளதோடு, உறவினர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.