Oct 24, 2024 - 05:42 PM -
0
தேர்தல் காலங்களில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்துக்கு வரும் பரசூட் வேட்பாளர்களை நம்ப வேண்டாம். வாக்குகளை சிதறடித்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு வந்துள்ள சில சுயேச்சைக்குழுக்கள் தொடர்பிலும் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
தலவாக்கலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
எனது 20 வருடகால அரசியலில் மலையக மக்களுக்கு நிறைய சேவைகளை செய்துள்ளேன். மக்களுக்கு சேவைகளை வழங்குவதே காங்கிரஸின் பிரதான நோக்கம். எமது பொதுச்செயலாளரும் அமைச்சராக குறுகிய காலப்பகுதிக்குள் பல சேவைகளை செய்துள்ளார். நாம் மக்களுடன் நிற்பதால்தான் எல்லா தேர்தல்களிலும் எம்மை வெற்றிபெற செய்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டமென்பது மலையக மக்களின் அரசியல் இருப்பாகும். அங்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். சுயேச்சையாக பலர் போட்டியிடுகின்றனர். அவர்கள் வெற்றிபெற்றால் மகிழ்ச்சிதான். ஆனால் வாக்குகளை சிதறடிப்பதே சிலரது நோக்கமாக உள்ளது.மேலும் சிலர் தேர்தல் காலங்களில் மாத்திரம் நுவரெலியாவுக்கு வருகின்றனர்.
தேர்தல் முடிந்ததும் காணாமல்போய்விடுவார்கள். ஆனால் நாம் தோட்டத்தில் மக்களோடு மக்களாக வாழ்கின்றோம். எனவே, எமது மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் என முழுமையாக நம்புகின்றோம்.
மலையக மக்களுக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். தோட்டப்பகுதிகளுக்கு வந்து பார்த்தால்தான் எமது அபிவிருத்தி திட்டங்கள் தெரியும்.
உரிமை மற்றும் அபிவிருத்தி அரசியல் இரண்டையும் செய்துள்ளோம். இது மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.
--