Oct 25, 2024 - 06:11 PM -
0
இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையமும் விமான சேவை நிறுவனமும் அறிவித்துள்ளன.
ஒக்டோபர் 19 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்தியாவில் இருந்து வந்த இரண்டு விஸ்தாரா விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தமை தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விமானங்களை சோதனை செய்தனர்.
இதனால் யாரேனும் அசௌகரியம் அடைந்திருந்தால் வருந்துவதாக விமான நிலையமும் விமான சேவை நிறுவனமும் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாக ஏராளமான இந்திய விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக நேற்றைய தினம் மட்டும் சுமார் 80 போலியான அறிவிப்புகள் கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலை காரணமாக, இந்த போலி அச்சுறுத்தல்கள் குறித்து செய்திகளை வழங்கும் நபர்களின் தகவல்களை கோரி மெட்டா மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு அறிவிக்கவும் இந்திய அரசு தீர்மானித்துள்ளது.