Oct 29, 2024 - 05:19 PM -
0
சமூகத்திற்கு உதவி செய்ய விரும்பினால் தேர்தலில் இருந்து விலகுங்கள் என நல்லாட்சி தேசிய முன்னணியின் ஆதரவு “வி ஆ வண்”( we are one) அமைப்பின் இணைப்பாளர் முகம்மட் ரஸ்மின் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தமிழ் பேசும் சமூகங்கள் பல பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றது. இதுவரை இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றுக்கு எந்த தீர்வையும் காணவில்லை. அரசியலுக்காக பிச்சைக்காரனின் காயம் போல அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டிற்கு தரமான தலைவர் 'அநுர கிடைத்துள்ளார். நாட்டுக்கு தேவையான நல்ல தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று அன்று அவர் கூறினார். இப்பொழுது கூறுகிறார்
உங்களுக்கு தேவையான உங்கள் தலைவர்களை தேர்வு செய்யுங்கள் என்று. அதுதான் உண்மை.
இப்பொழுது பாராளுமன்றத் தேர்தல் வந்திருக்கிறது. எமக்கு தேவை உண்மையான தலைவர்கள்.
அறுகம்பை சம்பவத்திற்கு இதுவரை யாருமே வாய் திறக்காதது ஏன்? பொத்துவிலில் உள்ள முஷாரப்பே வாய் திறக்கவில்லை.
என்ன 'அநுரவிற்கு பயந்து நிற்கிறீர்களா? அல்லது தமது இருப்பு கேள்விக் குறியாக போகும் என்று நினைக்கிறீர்களா?
இவர்களா தலைவர்கள்? கடந்த காலங்களில் எமது தலைவர்களாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை உலகறியும்.
தயவுசெய்து சமூகத்துக்கு உதவி செய்ய வேண்டுமாக இருந்தால் இந்த போட்டியில் இருந்து ஒதுங்கி கொள்வது நல்லது. புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
எமது சமூகத்துக்கு அனைத்து அசிங்கத்தை அள்ளித் தந்தவர்கள் எமது இஸ்லாமிய தலைவர்கள். ஜனாஸா எரிப்புக்கு துணை போன இனத்துரோகிகள் இவர்கள்.
ஹக்கீம் 20 வருட காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சாதித்ததென்ன என கேள்வி நிலவுகிறது.
காபிஸ் நசீர் சொன்னார் 150 பெட்டிகளை எரிக்கப்பட்டன ஜனாஸா இல்லை என்று. அதனையும் ஹக்கீம் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தார். மன்னிக்க முடியாது.
தேசிய ரீதியிலே மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதேபோல் பிராந்திய ரீதியில் அத்தகைய மாற்றம் தேவை. எனவே இந்த பழைய ஏமாற்று இனத் துரோகிகள் அனைவரையும் துரத்தியடித்து புதிய நல்ல முகங்களைத் தேர்ந்து ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்த மக்களே நீங்கள் உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
--