வடக்கு
இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்!

Oct 31, 2024 - 01:12 PM -

0

இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்!

எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட இளைஞர்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கி உரிமைக்குரலை வலுப்படுத்துமாறு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின்  வன்னி மாவட்ட வேட்பாளர் செந்தில் நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலானது தமிழ்மக்களை பொறுத்தவரை சவாலான ஒரு நிலையினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இம்முறை வன்னி மாவட்டத்தில் 6 பேரை தெரிவு செய்வதற்காக 423 பேர் களத்தில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் எமது மக்களின் வாக்குகள் என்றுமில்லாத வகையில் சிதறடிக்கப்படக்கூடிய ஒரு நிலமை காணப்படுகின்றது.

 

எனவே வன்னி மக்கள் வெற்று வாக்குறுதிகளுக்காக ஏமாறாமல், போலிப்பிரச்சாரங்களுக்கு மயங்காமல் வேட்பாளர்களின் கடந்த காலங்கள் தொடர்பாகவும் அவர்களது கொள்கை நிலைப்பாடு தொடர்பிலும் நன்கு அறிந்து வாக்களிக்கவேண்டும்.

 

குறிப்பாக வாக்குகளை வீணடிக்காது, மக்களின் குரலாக பரிணமிக்க கூடியவர்களை அதிலும் குறிப்பாக இளைஞர்களை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்.

 

வன்னி மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்டு தடம் மாறாமல் பயணிக்கின்ற  இளைஞர்கள் பலர் உள்ளனர். 

 

எதிர்காலத்தை மாற்றியமைப்பதற்கான ஆற்றலும் ஆளுமையும் எமது இளைஞர்களிடம் நிறையவே இருக்கிறது. ஆயினும் அவர்களுக்கான வாய்ப்புக்களை மக்கள் இதுவரை வழங்கியிருக்கவில்லை.

 

எனவே கடந்துபோன அரசியல் ஒழுங்குநிலையை மாற்றி தமிழ்த் தேசிய எண்ணக்கருவோடு மக்கள் பணியாற்றுகின்ற இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள் வாக்குகளை இம்முறை வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.  

--

Comments
0

MOST READ
01
02
03
04
05