Nov 1, 2024 - 03:41 PM -
0
பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாடாளவிய ரீதியில் உள்ள அரச ஊழியர்கள் பொதுத் தேர்தலுக்காக தங்களது தபால் மூல வாக்குகளை அளித்து வருகின்றனர்.
இம்முறை பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 20,502 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான நந்தன கலபொட தெரிவித்தார்.
தபால் மூல வாக்கெடுப்புக்கள் இன்று (01) இரண்டாவது நாளாக இடம்பெற்றது. இன்றைய தினம் ஆசிரியர்கள், பிரதேச செயலகங்களில் பணிபுரிபவர்கள், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
ஹட்டன் பஸ் டிப்போவில் இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 287 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன.
கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் நாளாக தபால் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்றது.
இதன்படி முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளிப்புக்காக இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட தினங்களில் தபால் மூல வாக்களிப்பினை அளிக்க முடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால் மூல வாக்களிப்பதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலுக்கு பதிவு செய்யப்பட்ட 17 அரசியல் கட்சிகளும், 11 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
--