மலையகம்
'திருப்புமுனை அரசியல்' எனும் நூல் வெளியீடு!

Nov 3, 2024 - 05:01 PM -

0

'திருப்புமுனை அரசியல்' எனும் நூல் வெளியீடு!

தலவாக்கலை - வட்டகொடை, மடகொம்பரையிலிருந்து மக்கள் மன்றத்திற்கு - 'திருப்புமுனை அரசியல்' எனும் நூல் வெளியீடு நேற்று (02) ஹட்டன் DKW மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் மயில்வாகனம் உதயகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர், மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் ராஜாராம், பொதுசெயலாளர் பேராசியர் விஜயசந்திரன் உட்பட  ஊடாகவியலாளர்கள், கல்வியியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம், 

அநுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீதி மிகவும் அன்போடும் அக்கறையோடும் கருத்துகளை முன்வைத்து வந்தார். இப்போது அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் உள்ளதால் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும்.

எனது அரசியல் வாழ்க்கைக்கு 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த நூல் வெளியிடப்படுகிறது. வெறுமனே விளம்பரத்திற்காக என்று இல்லாமல் எனது உண்மையான சேவை மக்களுக்குப் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கமாகும். 6 வருடங்கள் மாகாண சபையிலும் 14 வருடங்கள் பாராளுமன்றத்திலும் இருந்துள்ளேன். பிரதியமைச்சராக, கெபினட் அமைச்சராக இருந்ததோடு, நல்லாட்சி அரசாங்கத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சராக பதவியேற்று தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீட்டுத் திட்டத்தையும் இந்திய வீடமைப்புத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்திக் காட்டினேன்.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள், செயலங்களை அதிகரித்ததோடு, மலையகத்துக்கென தனியான அதிகார சபையையும் உருவாக்கினேன். பிரதேச சபையின் ஊடாக தோட்டங்களுக்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்று இருந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்ததால் அதன் சேவையை தோட்ட மக்களும் பெற்றுக் கொள்ள முடிந்தது.

நான் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து தோட்டத்தில் வாழ்ந்து அந்த மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து வைத்திருந்ததால் மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு, அரசியலில் பிரவேசித்த போது, பல்வேறு எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்திக்க நேர்ந்தது. எனினும், தோட்ட மக்களோடு வாழ்ந்த அனுபவம் இருந்த காரணத்தால் எனது அரசியல் பயணத்தை இலகுவாக மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து பல விடயங்கள் சொல்லப்பட்டு வந்துள்ளன. ஆனால், எமது காலத்தில் செய்து காட்டியுள்ளோம். உதாரணத்துக்கு ஹட்டன் புகையிரத நிலையத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த தகர வேலியை அகற்றி நவீன மயமாக்கி பிரதான பாதையை விஸ்தரித்து நகருக்கு புதுப் பொலிவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

எனது அரசியல் பயணத்தில் மனோ, இராதா, உதயா ஆகியோர் உறுதுணையாக இருந்ததோடு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றத்தில் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு விருப்பு வாக்கை அளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மனோ கணேசன்,

சாதாரண தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அரசியலில் இறங்கி, கெபினட் அமைச்சராகி சேவை செய்து மக்கள்200 மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரத்தின் வளர்ச்சியும் உயர்ச்சியும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

தான் பிறந்த மண்ணுக்கு தேவையான அபிவிருத்தியையும், மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு அரசியலில் கால் பதித்த திகாம்பரம் அதை நடைமுறைப்படுத்திக் காட்டினார். இனவாதம், மதவாதம், பிரதேச வாதம், பொய், புரட்டு, பித்தலாட்ட வாதங்களுக்கு அப்பால் நேர்மையான் அரசியலை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளார்.

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேடனும் என்ற சிந்தனையோடு தமிழ் முற்போக்கு ஆரம்பிக்கப்பட்ட போது அதில் பெரும் பங்கு வகித்துள்ளார். தம்பி திகாவும் நானும் பாராளுமன்றத்தில் சகபாடிகளாக இருந்து பல்வேறு விடயங்களில் கலந்து பேசி பின்தங்கியிருந்த சமூகத்தின் நன்மைக்காக பாடுபட்டுள்ளோம்.

அவர்  நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள், செயலகங்கள் அதிகர்ப்புக்கும் அதிகார சபை உருவாகுதற்கும் காரணமாக இருந்ததை மலையக வரலாறு நினைவுகூரும். அதேபோல், காணி உறுதிப்பத்திரங்களுடன் தனி வீட்டுத் திட்டத்தை ஏற்படுத்தி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர திட்டமிட்டு செயலாற்றி வந்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடி மலையகம் எழுச்சி பெற அவரது சேவையைத் தொடர வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05