Nov 7, 2024 - 10:18 PM -
0
பதிவு செய்யப்படாத யானைகளை வைத்திருந்த வழக்குகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று (07) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இயற்கை மற்றும் கலாசார கற்கைகளுக்கான நிலையம் உள்ளிட்ட குழுவினால் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, பதிவு செய்யப்படாத யானைகளை வைத்திருந்தமை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளை விடுவிப்பதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்ததாக அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த யானைகளை விடுவிக்குமாறு யானைகளின் உரிமையாளர்கள் என கூறிக்கொள்ளும் நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அது சட்டத்திற்கு முரணானது எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி வாதிட்டார்.
முன்வைக்கப்பட்ட காரணிகளைப் பரிசீலித்த நீதிபதிகள், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை உடனடியாக இடைநிறுத்த உத்தரவிட்டதுடன், நீதவான் நீதிமன்றில் உள்ள இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் முன்னர் வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் இடைநிறுத்தி, உயர் நீதிமன்ற அமர்வு மற்றுமொரு உத்தரவை பிறப்பித்தது.