Nov 8, 2024 - 08:23 AM -
0
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிம்புல்கால பகுதியில் நேற்று (07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வீடொன்றுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆணும் பெண்ணும் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர் ஆண் மாரவில பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும், காயமடைந்த பெண் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும் தெரியவருகிறது.
ஒரு வீட்டின் குடிநீர் பராமரிப்பு பணிக்காக வந்த இருவர் பழுதுபார்த்து விட்டு வீட்டை விட்டு வெளியேறிய போது, முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் பராமரிப்பு பணிக்காக வருகைதந்த ஒருவரும், குறித்த வீட்டின் பெண்ணும் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.