Nov 10, 2024 - 04:30 PM -
0
இம்முறை தேர்தலில் வன்னிமாவட்டத்தில் இருந்து பெண் பிரதிநிதி ஒருவரை பாராளுமன்றுக்கு அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்தார்.
வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்தி அவர்களின் கனவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளேன். வன்னி மக்களின் ஆதரவு இம்முறை எனக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளித்தமைக்கு இந்த மக்களுக்கு நன்றிகளை தெரிவுத்துக் கொள்கிறேன். அதேபோல இம்முறையும் மூவினமக்களும் எனக்கு ஆதரவை அளிக்கவேண்டும். வன்னி மக்கள் எனக்கு எப்போதுமே ஆதரவாக இருந்துள்ளனர்.
இதுவரை இருந்த அரசாங்கமோ அல்லது அமைச்சர்களோ போருக்குபின்னர் வன்னி மக்களுக்காக எந்தவித நல்லதையும் செய்யவில்லை.
இங்குள்ள பெண்களிடம் கனவுகள் பல உள்ளது. அதனை நாம் நிறைவேற்ற வேண்டும். சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றவேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான நீண்டகால உதவித்திட்டங்களை வழங்க வேண்டியுள்ளது.
வீதிப்பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனைகள் உள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடும் வறுமைநிலையில் உள்ளனர். எனவே இவற்றை தீர்க்கவேண்டிய தேவை உள்ளது.
நான் இப்பகுதி மக்களின் ஆதரவுடன் இம்முறை பாராளுமன்றம் நிச்சயமாக செல்வேன். இங்குள்ள கிராமங்களுக்கு செல்லும் போது அந்த மக்கள் எமக்கான ஆதரவை உற்சாகமாக வழங்கிவருகின்றனர். இதுவரை முஸ்லிம் தமிழ் அமைச்சர்கள் இருந்த நிலையில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களையும் இங்கு செய்யவில்லை என தெரிவித்தார்.
--