Nov 18, 2024 - 07:17 AM -
0
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.
2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் அமோக வெற்றியைப் பதிவு செய்ததோடு, தேசிய பட்டியல் ஆசனங்கள் உட்பட பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைக் கைப்பற்றியது.
இதன்படி, புதிய அரசாங்கத்திற்கான அமைச்சரவை இன்று (18) பதவியேற்கவுள்ளது.
புதிய அமைச்சரவையில் 25இற்கும் குறைவான அமைச்சர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர்கள் இன்று (18) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர்.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது என தேசிய மக்கள் சக்தியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க, மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுடன் முன்னோக்கி செல்வதற்கு தானும் எம்.பிக்கள் குழுவும் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.