வடக்கு
உறுதிப்படுத்திய தமிழக மீன்பிடித்துறை!

Nov 26, 2024 - 03:38 PM -

0

உறுதிப்படுத்திய தமிழக மீன்பிடித்துறை!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 

நேற்று (25) யாழ்ப்பாணம் மாதகல்ப பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இலங்கையின் கிழக்கு மையம் கொண்டிருக்கின்ற சூறாவளி காரணமாக உயிராபத்து ஏற்படும் என்ற வகையில் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் செல்ல வேண்டாம் என தென்னிந்திய மீன்பிடித்துறை எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையினுடைய பொருளை பார்க்கும் பொழுது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் வந்து மீன்பிடிப்பதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

 

நாங்கள் பல தடவைகள் இது குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறியபோது திசை மாறியும், காற்றின் அழுத்தம் காரணமாகவும் இலங்கை கடற்பரப்பினுள் இந்திய படகுகள் செல்வது இயல்பானது என்று கூறினார்கள். ஆனால் அவர்களது அறிவிப்பானது இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது உறுதிப்படுத்தியுள்ளது.

 

சூறாவளியில் இருந்து தமது உயிரை பாதுகாப்பதற்காகவே இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்திருக்கின்றார்கள். இது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் இலங்கையின் வடபுல மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினி சாவினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையிலே இதைக் கண்டும் காணாதது போல் இருந்து எம்மீது கருணை காட்டாத தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்பினுள் வந்து தொடர்ந்து மீனைப் பிடிப்பது மாத்திரம் இல்லாமல் நமது வளங்களையும் அழித்துவிட்டு செல்கின்றமை வாடிக்கையான விடயம்.

 

எனவே சூறாவளி அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுத்திருக்கின்ற தமிழக மீன்பிடித்துறையானது இந்திய இழுவை மடி தொழிலாளர்களை தொடர்ச்சியாக எமது கடற்பரப்பினுள் வராமல் தடுக்க வேண்டும். இது இப்படி இருந்தால் எமது இரு நட்டு மீனவர்களினது பிரச்சினைகளும் தீர்வதற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05